Headlines News :
முகப்பு » » மலையகத் தமிழர்கள் பயன் பெறாத காணியும், காவல்துறையும் : மாகாண சபையில் குரல் ஒலிக்குமா? - மு.சிவலிங்கம்

மலையகத் தமிழர்கள் பயன் பெறாத காணியும், காவல்துறையும் : மாகாண சபையில் குரல் ஒலிக்குமா? - மு.சிவலிங்கம்


சர்ச்சைக்குரிய மாகாண சபையின் தோற்றத்துக்கான வரலாற்றுப் பின்னணியையும், காரணிகளையும் புதிய தலைமுறையினர் அறிந்துக்கொள்வது அவசியமாகும்.

மாகாண சபை முறைமை என்பது தேசிய சிறுபான்மை இனங்களுக்கு ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்துக் கொடுக்கும் கோட்பாட்டில் உருவாகியதாகும். சமஷ்டி ஆட்சி முறைமையைக் கூட சிங்கள மக்கள் 'தனி நாட்டுப் பிரிவினை” என்று கண்டனமும், பகிஷ்கரிப்பும் செய்யுமளவிற்கு இனவாத அரசியல்வாதிகள் அவர்களுக்கு அரசியல் கற்றுக் கொடுத்திருந்தனர்.

சமஷ்டி ஆட்சி முறையை அறிமுகப்படுத்திய பண்டாரநாயக்காவே, சிங்கள மக்களின் மிரட்டலுக்குப் பயந்து மௌனமாகி முதுகைத் திருப்பிக் கொண்டார்.

இடைவிடாத தமிழாpன் உரிமைக் குரல் சமஷ்டி கோரிக்கையிலிருந்து ஆறு அம்ச கோரிக்கை,  பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம்,  மாவட்ட சபை என தாகம் தீராத தவிப்புக்களிலிருந்து  வட்டுக் கோட்டை தீர்மானத்தோடு இளைப்பாறி நின்றது.

உலக நடப்புகளுக்கொப்ப.. ஒடுக்குமுறைக்கெதிராக சிறுபான்மை தேசிய இனங்கள், அரசை நோக்கி ஆயுதமேந்தியப் போராட்டங்களுக்குள் தள்ளப்பட்ட நிர்ப்பந்தம், தமிழின புதிய தலைமுறையினரையும் பின்பற்ற வேண்டிய எழுச்சிக்குள் தள்ளியது. இந்த விடுதலை ஆவேசத்துக்கு, இனவாத அரசுகளின் விபாPத ஜூலை மாதங்களின் அட்டூழியங்களே வழி கோலின..!
            ஜூலை 56 ல் தனிச் சிங்கள மொழிச் சட்டம்
            ஜூலை 57 ல் பண்டா - செல்வா ஒப்பந்தம்  (கிழிப்பு)
            ஜூலை  77 ல் ஐக்கிய தேசிய கட்சியின் இனவெறி முன்னெடுப்பு
            ஜூலை  79 ல் பயங்கரவாத தடைச் சட்டம் உருவாக்கம்
          ஜூ_லை 83 ல் ஜ்வாலை விட்டு எரிந்த இனப் படுகொலைகள்     (Genocide)

இவ்வாறு 'ஆடி” முடித்த இனவாத அட்டூழியங்களை தற்காலிகமாக தடுத்து வைக்கும்நோக்கில்தான், 77 க்குப் பிறகு செயற்பட்ட, அனைத்துக்கும் சூத்திரதாரியாகவிருந்த ஜயவர்தனாவுடன், ராஜிவ் காந்தி இணைந்து உருவாக்கிய மாகாண சபை முறைமை மக்களிடம் முன் வைக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையின்  ஆட்சியைப் பரீட்சித்துப் பார்க்க முன்வந்தமுதலாவது முதலமைச்சர் வரதராஜ பெருமாள் 'நாற்காலியைக் கூட உரிமை கொண்டாட முடியாத சபை இது...!  தமிழர்தாயகமேவழி..” என்ற பிரகடனத்தோடுதமிழ் நாடு சென்றடைந்தார்.!

தொடர்ந்தும், இணைந்த வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டும், மாகாண சபை ஆட்சி முறை குளறுபடியாக பேசப்பட்டும் வந்த நிலையில், மே மாதம் 2009 ம் ஆண்டு “இந்தியா, இலங்கை இணைந்து பெற்ற ஜெயபரிகை” க்குப் பின்னர் தளம்பல் நிலைக்குள் அரசு வீழ்ந்தது.. அன்றைய சந்திரிகா, முன் கொணார்ந்த அரசியல் பொதி (Pழடவைiஉயட pயஉமயபந) எவ்வாறு தோலுரிக்கப்பட்டு வந்ததோ.. அதே தோலுரிப்பு மாகாண சபை முறைக்குள்ளும் நடந்துக் கொண்டிருக்கிறது.

பற்களைப் பிடுங்கிவிட்டு பாம்பை ஆட்டிக் கொண்டிருக்கும் வித்தை போல்,சிறுபான்மை தேசிய இனங்களுக்குரிய கிழக்கு மாகாணத்தின் இரண்டாவது சபையையும் அதிகாரங்களைப் பிடுங்கிக் கொண்டு  அரசே நடத்திக் கொண்டிருக்கிறது.இரண்டு சபைகளின் இரண்டு முதலமைச்சர்களும் ‘வீட்டுக்கு மாப்பிள்ளையாகவே’ முடங்கியிருக்கும் நிலையேற்பட்டது... ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது....

யுத்த அழிவுக்குப் பின்னர், மக்களின் இயல்பு வாழ்க்கையை உருவாக்குவதே இன்றைய அடிப்படை நோக்கமென்றும்,  36  ஆசனங்களில் 32 ஆசனங்களைப் பெற்றேனும், உருக்குலைந்த தமிழ் மக்களது நிலைப்பாட்டையும், அவர்கள் நம்பியிருக்கும் தலைமையையும், தற்போதைய  சூழ்நிலையில், சர்வதேச சமூகத்தினருக்கு காண்பிக்க முன் நிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் போட்டியிடும்மாகாண சபை தேர்தலில் பிரதானமாகப் பேசப்படும் காணி, காவல் துறை அதிகாரங்களே முன்னிலை படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வேளையில்,மலையகத் தமிழர்கள் இந்த காணி, காவல் துறை அதிகாரங்களை கனவில்கூட நினைக்க முடியாத நிலைமை இருந்த போதும், அவர்களது தேசிய இருப்பை நிலைநாட்டிக் கொள்வதற்கு எவ்வித வேலைத் திட்டங்களை வைத்திருக்கின்றார்கள் என்பதை இன்று வரை அறிய முடியாதுள்ளது. இருநூறு ஆண்டு கால வரலாற்றினைக் கொண்ட மலையகத் தமிழர்கள், தங்களது பாரம்பாpய நிலமென்று ஆறு அடி கொண்ட மயான பூமியைக் கூட உரிமை கொண்டாட முடியாத நிலைமையை, இன்று வரை உள் நாட்டு பாராளுமன்றத்துக்குக் கூட எடுத்துச் செல்லாத அரசியலே மலையகத்தில் நிலைத்திருக்கின்றது.

1971 ம் ஆண்டு மத்திய வங்கி சுட்டிக் காட்டிய புள்ளி விபரப்படி, ஐந்து லட்சம் ஏக்கர் ரப்பர் பயிர் நிலமும், ஐந்தரை லட்சம் ஏக்கர் தேயிலை பயிர் நிலமும் அன்று இருந்தன.  அதி தீவிர சுதேசியக் குடியேற்றத் திட்டமென்று சிங்கள மக்களை பெருந் தோட்டங்களில் குடியேற்றினர். தேயிலை, ரப்பர் பயிர்கள் சிதைக்கப்பட்டன.தோட்டத் தொழில் முறையில் ஏக்கர்களுக்கேற்றவாறே தொழில் வழங்கும் முறை இருந்தபடியால், தொழிலாளர்கள் வேலையிழந்து வீதிக்கு வந்தனார்.

சிறிமாவோ ஆட்சியில் உசவசம,  நட்சா, ஜனவசம,  அரச பெருந்தோட்ட யாக்கம் போன்ற காணி சீர்திருத்தச் சட்டங்களினால், தோட்ட நிலங்கள் சுவீகாpக்கப்பட்டு, (Land acquisition) சிங்கள கிராமத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. அத் திட்டங்கள் மூலமாக அவர்கள் தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்களாயினர். ( Small Tea estate holders) . இத் திட்டங்களினால் பாரம்பரிய நிலங்களிலிருந்து தமிழ் தொழிலாளர்கள், இடம்பெயர்ந்தனர். அவர்களது வசிப்பிடச் சூழல் யாவும் முற்றிலும் மாற்றமடைந்தன. குடியேற்ற நிலங்களுக்கு எல்லைகள் வகுக்கப்பட்டதால், வீடுகளிலிருந்து ஐந்து நிமிடங்களில் நெடுஞ்சாலைக்கு வரவேண்டிய மக்கள், பாதைகளைத் தேடி ஒரு மணித்தியாலம் பயணம் செய்ய வேண்டிய நிலைமைக்குள் தள்ளப்பட்டனர். அவர்களது இனச் செறிவு சிதறடிக்கப்பட்டன.
இந்த சீர்திருத்தத் திட்டங்களிலும் கூட மலையக மக்கள், பிரிட்டிஷ்காரர்கள் கட்டிப் போட்ட லயத்து முகாம்களிலேயே அடைப்பட்டிருந்தனர். அவர்களுக்கு காணி சீர்திருத்தச் சட்டங்களின் மூலம் வரிசைக் குடியிருப்பு முறை (Line room) ஒழிக்கப்பட்டு, சிங்கள மக்களைப் போன்று கிராமிய முறையில் வாழும் கலாச்சாரத்தை உண்டு பண்ண முற்றிலும் விரும்ப வில்லை.

தற்போது அரசு கண்டுபிடித்திருக்கும் 37 ஆயிரம் ஹெக்டார் தாpசு நிலங்களையாவது, தோட்ட மக்களுக்கு பகிர்ந்தளித்து, பண்ணை விவசாயம், தோட்ட விவசாயம் செய்து, சுய தொழில் வாழ்க்கையில் ஈடுபடுத்துவதற்கு, எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறும் மலையக உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்களா..? பாரம்பரியத் தொழிலாக நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும், தேயிலை, ரப்பர் பெருந்தோட்டத் தொழிலிருந்து இளைய பரம்பரையினரையாவது விடுவிக்க இவர்களின் உரத்தக் குரல் நாடாளுமன்றம் வரை எடுத்துச் செல்லப்படுமா..?

ஊவா மாகாணத்தில் மூன்று உறுப்பினர்கள், சப்ரகமுவ மாகாணத்தில் இரண்டு உறுப்பினர்கள், மத்திய மாகாணத்தில் 9, அல்லது 10 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் மூன்று மாகாணங்களிலும் ஒருமித்தக் குரல் எழுப்பப்படுமாயின், அது தேசியக் குரலாக கவனத்தை ஈர்க்கும்.

இந்தக் காணி உரிமைக்கப்பால், காவல் துறையின் பயன்பாடுகளை நோக்குவோம்... எமக்கு பொலிஸ் அதிகாரத்தையும் பெற முடியாது..! காணி அதிகாரத்தையும் பெறமுடியாது..! குறிப்பாக மாகாண சபை அதிகாரங்களைப் பெறுவதற்கு மாகாண சபையை அமைக்கும் தகுதி மலையக மக்களுக்கு கிடையாது..மாகாண சபை முறை உருவாகிய பின்னரும், தமிழர்கள் செறிவாக வாழும் ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களோடு, தென் மாகாணத்தில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கும், தமிழ் மொழி பிரயோகத்தின் மூலம் காவல்துறை செயற்பாடுகள் நடைபெறுவதில்லை..

ஒரு தமிழ் பேசும் பிரஜை தனது முறைப்பாட்டை, காவல் நிலையத்தில் தமிழில் பதிவு செய்ய முடியாது.. சிங்களம் புரியாத தமிழரும், தமிழ் புரியாத சிங்களவரும் எழுதிக் கொள்ளும் வாக்குமூலம்  வினோதமானது. இந்த விசித்திரம் மலையகத்தில்தான் நடைபெறுகின்றது.. 'வழக்கு... வம்பு..” என்று நீதிமன்றம் ஏறும் போதுதான், சம்பந்தப்பட்ட மக்கள் தங்களுக்கு நேர் விரோதமான தீர்ப்பினை பெற்றுக் கொள்கின்றனர்.. ஆயுள் தண்டனை, மரண தண்டனை வரை இந்த மொழி புரியாத வாக்கு மூலங்கள் இழுத்துச் செல்கின்றன..!

தமிழர்கள் செறிவாக வாழும் தேர்தல் மாவட்டங்களில் கூட தமிழ் மொழி பிரயோகம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1977 லிருந்து இன்று வரை இந்த உரிமையைக் கூட பெற்றெடுக்க முடியாத கையாலாகாத நிலை தொடர்ந்து வருகின்றது. இந்த நிலைமை  மாகாண சபை உறுப்பினர்கள் மூலம் மாற்றம் பெறுமா..? சபைக்கு வரும் புதிய உறுப்பினர்கள் இது பற்றி கவனம் செலுத்துவார்களா..?

சுடச் சுட மாகாண சபைத் தர்தல் காலத்து கட்டுரையாகவிருப்பதால், மாகாண சபைக்கு தரிவாகும் உறுப்பினர்கள், மலையக மக்களின் அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை, மாகாண சபைக்குள் எப்படி அனுகுவதென்பதை அவர்களே அறிந்து கொள்ள வேண்டும். அந்தப் பொறுப்புக்களையும், அவர்களது அறிவு சார்ந்த செயற்பாடுகளையும் மத்திய மாகாணத்தில் வாழும் மலையக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவைகளுக்கப்பால் மறுபுறம் அரசியல் விமர்சகர்களும், சமூக சிந்தனையாளர்களும் “இந்த மாகாண சபை முறை சிறுபான்மை மக்களுக்கு உதவாத சபையென்று கூறி வரும்போது, அந்த சபைக்குள்ளே நுழைவதற்கு ஒரே ஆட்சியில் குடும்பம் நடத்தும் இரண்டு கட்சிகள், தேர்தல் களத்தில் “சக்களத்திச் சண்டை” நடத்தி வருவதையும், அந்தச் சண்டை “சூரன் போராக” விசுவரூபமெடுத்து, வாக்காளர்கள் வேடிக்கைப் பார்க்கவும், இனவாதிகளுக்கு கிடைத்த ருசியான தீனியாகவும் அமைந்திருப்பதையும் இத் தேர்தல் காலங்களில் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

துயரங்களையும், ஏமாற்றங்களையும் அனுபவித்து வரும் மலையக மக்களின் வாழ்க்கையில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும், தர்தல் அரசியல்வாதிகளின் போக்குகள் மாறுமா..?  மாற்றப்படுமா..? என்ற வினாக்களை, இளைய பரம்பரையினரிடம் விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது.
மு.சிவலிங்கம்,
இல.56, ரொசிட்டா வீடமைப்புத் திட்டம்,                           கொட்டகலை.
தொ.பே.-  077 5757202
மின்னஞ்சல் - moonaseena@yahoo.com

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates