Headlines News :
முகப்பு » , » நமது மலையகம்.கொம் - அறிமுகநிகழ்வு - -மல்லியப்பு சந்தி திலகர்

நமது மலையகம்.கொம் - அறிமுகநிகழ்வு - -மல்லியப்பு சந்தி திலகர்


நாளைய மலையகத்துக்கான இணையத்தகவல் தளத்தினை உருவாக்கும் அத்திவாரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நமதுமலையகம்.கொம் இணையத்தள அறிமுக நிகழ்வு கடந்த 28 ஞாயிறு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. நமதுமலையகம்.கொம் நண்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெற்றது.
லெனின் மதிவானம்

தெளிவத்தை ஜோசப்

தொடக்கவுரை ஆற்றிய லெனின் மதிவானம் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில்  மேலெழுந்துவரும் மலையக தேசிய கருத்துருவாக்கத்திற்கு மலையகத்துக்கான இணையத்தளம் ஒன்றின் அவசியம் குறித்து உரையாற்றினார்.

தலைமையுரை ஆற்றிய தெளிவத்தை ஜோசப் அவர்கள் தனக்கு இணையத்தளம், முகநூல் போன்ற விடயங்கள் பரீட்சயம் இல்லாதபோதிலும் கூட அதன் வியாபகத்தையும் அதன் அவசியத்தையும் உணர்வதாக தெரிவத்தார். இணையத்தளங்களிலேயே எதிர்கால இதழியல் அடங்கப்போகின்றது என்கிறதன் அடிப்படையில் இதழியலின் முக்கியத்துவத்தினை ஈழத்து இதழியல் வரலாற்றோடு ஒப்பிட்டு உரையாற்றினார். பல்வேறு தகவல்களையும் கால ஒழுங்கில் எடுத்துக்கூறிய அவர் மலையகம் என்ற கருத்துருவாக்கத்தில் மலையக இலக்கியத்தின் பங்கு உயர்வானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
என்.சரவணன்
அடுத்ததாக மலையகத்தின் அரசியல் இருப்பில் இணையத்தின் வகிபாகம்எனும் தலைப்பில் ஊடகவியலாளர் என்.சரவணன் உரையாற்றினார். குறிப்பாக மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதிலும் மலையக மக்களுக்கான தேவைகள் குறித்த பரப்புரைச் செய்வதிலும் இணையத்தளங்கள் ஆற்றக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும் நுட்பம் சார்ந்தவிடயங்களை முன்வைத்து சராவின் உரை அமைந்திருந்தது. இன்று மலையகத்தின் விடிவுக்கு, மலையக தேசியம் குறித்த குருத்தாக்கத்தை பலப்படுத்த வேண்டியிருக்கிறது அப்படிப்பட்ட கருத்தாக்கத்தை வலியுறுத்த, அதற்கான சித்தாந்த பலமூட்டும் ஆய்வுகளளையும், கட்டுரைகளையும் நிறைய கொணர வேண்டியிருக்கிறது, அதற்க்கான விழிப்புணர்ச்சியை பல மட்டங்களிலும் கொணர வேண்டியிருக்கிறது. அதற்கு ஊடக பலம் முக்கியமானது. துரதிர்ஷ்டவசமாக தமிழ் ஊடகத்துறை அன்றும் சரி இன்றும் சரி யாழ் மைய சக்திகளிடமே சிக்கியிருக்கிறது. அது உள்ளூரிலும் சரி புகலிடத்திலும் சரி. வடகிழக்கு தமிழ் மக்களுக்கு இரத்து குறித்து கரிசனை கொள்ளும் தார்மீக பொறுப்புண்டு. இருந்தாலும் இதற்காக இரைஞ்சுவதை விட நமக்கான ஊடகங்களை நாமே உருவாக்கிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம். நமதுமலையகம்.கொம் அப்படியொரு நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்றார் சரவணன்.
பேராசியரியர் சோ.சந்திரசேகரன்

மலையகத் தகவல் தளம் இணைய வலைபின்னலுக்குள் உள்வாங்கப்படுவதன் அவசியம் குறித்த காத்திரமான உரையை பேராசியரியர் சோ.சந்திரசேகரன் ஆற்றினார். கல்வியியல் சார்ந்த சிந்தனைகளுடனும் இன்றைய தொழிநுட்ப யுகத்தில் இணையத்தின் தேவைப்பாடு குறித்தும் மலையகத் தகவல் தளம் அதனுள் உள்வாங்கப்படும்போது முன்னாலுள்ள சவால்கள் பற்றியும் கருத்துரைத்தார். கடந்த ஆறு வருடகாலமாக தனது ஆய்வு விடயங்களுக்காக இணையத்தளத்தை மாத்திரமே பயன்படுத்திவருவதாக கூறிய பேராசிரியர் இன்று நாம் வாழும் தகவல் புரட்சி யுகம் நமதுமலையகம்.கொம் உருவாக்கத்துக்கான தேவையை உருவாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மல்லியப்புசந்தி
இறுதியாக மலையகத் தேசியத்தைக் கட்டியெழுப்பும் பணி எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளரும் செயற்பாட்டாளருமான ஏ.லோரன்ஸ் உரையாற்றினார். மலையக தேசியத்தை கட்டியெழுப்புதல் என்பதைவிட மலையகத் தமிழத் தேசியத்தை கட்டியெழுப்புதல் என்றே இது குறிப்பாக நோக்கப்படவேண்டும் என விளக்கிய திரு.லோரன்ஸ் மலையக மக்கள் சிங்களதேசியவாதத்திற்க மாத்திரமல்லாது யாழ்மையவாத தேசியத்தினாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மலையகக் கல்விப் பணியில் வடபகுதி ஆசிரியர்களின் மகத்தான பணியை நன்றியுடன் நினைவு கூரும் அதேவேளை யாழ் மையவாத கருத்துக்களின் அடிப்படையில் மலையக மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளையும் மறந்துவிடமுடியாது என தெரிவித்தார். மலையக மக்களுக்கான அதிகார பகிர்வு மூலமே அவர்களின் காணியுரிமை வீட்டுரிமை உள்ளிட்ட பல உரிமைகளை வென்றெடுக்கமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
ஏ.லோறன்ஸ்
நமதுமலையகம்.கொம் ஆரம்பநிகழ்வுக்கான உரைகளைத் தொகுத்தளித்த மல்லியப்புசந்தி திலகர் மலையகம் எனும் கருத்துருவாக்கத்துக்கு ஆதாரமாக அமைந்த மலையக இலக்கியப்பரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி தலைமையாக தெளிவத்தை ஜோசப் அவர்களும் மலையகப் பண்பாட்டம்சத்துடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொண்டுவரும் லெனின் மதிவானம் அவர்களும் மலையகக் கல்வியியல் சார்ந்து எதிர்கால முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பேராசிரியர்.சோ.சந்திரசேகரன் அவர்களும் ஊடகவியல் மற்று இணைய நுட்பம் சார்ந்து மலையகதகவல் தளத்தைக் கட்டியெழுப்புதல் அடிப்படையில் என்.சரவணன் அவர்களும் மலையக அரசியல் தொழிற்சங்க நடைமுறைகளுடன் தொடர்புட்ட வகையில் ஏ.லொரன்ஸ் அவர்களும் இன்றைய அறிமுக நிகழ்வில் உரைக்காக தெரிவு செய்யப்பட்டனர் எனவும் இதுவரை நண்பர்கள் மட்டத்தில் இயங்கிவந்த நமதுமலையகம்.கொம் இன்று முதல் அனைவருக்காகவும் திறந்துவிடப்படுவதாகவும் கூறினார்.
ஜி.போல் அன்ரனி

சி.அ.யோதிலிங்கம்

இரா. சடகோபன்
விஜயகுமார் 

எம்.ஜெயகுமார் 

அந்தனி ஜீவா


சபையோர் கருத்துரையின்போது எழுத்தாளர்கள்; இரா. சடகோபன் மற்றும் ஜி.சேனாதிராஜா ஆகியோர் மலையகம் குறித்த இணையத்தள பதிவுகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வரவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். கல்வியாளர் ஜி.போல் அன்ரனி மற்றும் எழுத்தாளர் அந்தனி ஜீவா ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.கருத்துரை வழங்கிய அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் நமதுமலையகம்.கொம் தமக்கான கொள்கை கோட்பாடுகளை வரையறுத்து செயற்படுவது பற்றி சிந்திக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் விரும்பியோ விரும்பாமலோ மலையகக் கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்துடன் இணைந்து செய்ற்படுவதாகவும் அத்தகைய சூழ்நிலையில் மலையக தேசியத்தைக்  கட்டியெழுப்புவதில் உள்ள சாத்தியப்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். ‘அடையாளம்அமைப்பின் செயலாளர் விஜயகுமார் கருத்துத் தெரிவிக்கையில் மலையக மக்களிடையே குறிப்பாக தொழிலாளர்களிடையே இருந்த போராட்ட குணம் திட்டமிட்ட அடிப்படையில் மழுங்கடிக்கப்பட்டுவருகின்றமை கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளது என குறிப்பிட்டார். நன்றியுரையாற்றிய நமதுமலையகம்.கொம் செயற்பாட்டாளர் எம்.ஜெயகுமார் நமதுமலையகம்.கொம் அனைத்தத்தரப்பினரையும் உள்வாங்கிச் செயற்படமுனையும் அதேவேளை அதன் நோக்கங்களுக்கு முரணான விடயங்களை உள்வாங்காத வகையில் கவனம்செலுத்தும் எனவும் கருத்துரைத்தார்.
வருகை தந்தோரில் ஒரு பகுதியினர்

பேராசிரியர் சபா.ஜெயராஜா, மா.கருணாநிதி, முதுநிலை விரிவுரையாளர் தை.தனராஜ், ஓ.ஆறுமுகம் உள்ளிட்ட கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த அறிமுக நிகழ்வில்  மலையகம் பண்பலை வானொலியை இணையத்தில் இயக்கிவரும் இளையவர்களான பிரதீப் மற்றும் தனா ஆகியோர் சபையோருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். மலையக புதிய முகங்கள் பலவும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தமை புதிய உத்வேகத்தை காட்டியது.

Share this post :

+ comments + 1 comments

5:50 PM

மலையக கருத்தியல் போராளிகளுக்குத் தமிழ் வையைக் கரையிலிருந்து நல்வாழ்த்துக்கள்.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates